Friday, September 3, 2010

நீயொரு குழந்தை

என் வலைப்பூவெங்கும்
தேவதை வாசம்.

வேறொரு பெயரில்
வந்து போகிறாயாடி?
00
கொண்டுவந்த
விளையாட்டுப் பொருட்களையெல்லாம்
குழந்தையிடம் கொடுத்துவிட்டு
நீ விளையாட
என்னை மட்டும்
எடுத்துக்கொள்வாய்!
00
நம்மிடையேயான பிரியத்தை
முத்தங்களைக் கொண்டு
அளவிடத்
தொடங்கிய நாளிலிருந்து
மொத்தவீடும்
முத்தவீடாகக் காட்சியளிக்கிறது!
00
நீ ரொம்ப அடக்கமானவள்
எனச் சொன்னதும்
விழுந்து விழுந்து
சிரிக்கிறாய்!
கவனி…
உன்னை
என்னிரு கரங்களுக்கிடையேயல்லவா
வைத்துக்கொண்டு சொல்கிறேன்!
00
பெயரென்னவென்று கேட்டால்
சொல்லவேமாட்டாய்…
இன்னும்
பெயர் வைக்கப்படாத
குழந்தையா? எனக் கேட்டவாறே
உன்னை
அள்ளிக் கொஞ்சுவேன்...
என் பெயரை
திரும்பத் திரும்ப
சொல்லத் தொடங்குவாய்!
00
வெறுங்கையோடு
வீடு வருவேன்...
உனக்குக் கொடுக்க
என்னிடம்
முத்தங்களைத் தவிர
வேறெதுவும் இல்லையெனத் தெரிந்து
வெட்கப்பட்டு கதவருகே
ஒளிந்துகொள்வாய்...
--நாவிஷ் செந்தில்குமார்.

2 comments:

க ரா said...

அருமை செந்தில்

தமிழ்செல்வன் said...

தங்கள் கவிதையை முதல் முறை படிக்கின்றேன்....
முழுவதும் படித்தேன்...
அத்தனையும் சிறப்பு...
தங்கள் ரசிகனாகிவிட்டேன்......
வாழ்த்துக்கள்.....
கவிதைக்கு அல்ல....
தங்கள் காதலுக்கு....