Monday, April 20, 2009

என்னவளே!

பேருந்து நடத்துனர் கேட்ட
ஐம்பது பைசா சில்லறை
“இல்லை” என்று சொல்கையில்
உன் உதடுகள் சுழித்து
உதிர்க்கிறாய்
கோடானு கோடி கொடுத்தாலும்
கிடைக்காத அழகை...

நீ பேசிய
வார்த்தைகளைக் காட்டிலும்
பேசாத வார்த்தைகள்தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்!
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே!

என்னதான்
எனக்காகவும் நீயே
சாப்பிடுவதாகச் சொன்னாலும்
உனக்காகக் கொஞ்சம்
சாப்பிடச் சொல்லி
ஒவ்வொரு வேளையும்
பசிக்கிறது எனக்கு!

கொடுத்ததைக் கேட்கும்
குறுகிய புத்தி
உனக்கும் எனக்கும்
முத்த விசயத்தில்...
வாரிவாரிக் கொடுத்தாலும்
தீர்ந்தபாடில்லை
நம் இதழ்கள் வழங்கிய
முத்தக்கடன்!
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, April 6, 2009

இது ஒரு கவிதைக்கான கவிதை!

படங்கள் இல்லாத
பாடப்புத்தகத்தில்
நீ வந்து அமர்ந்து
கொள்வதால்
புரட்டப் புரட்ட
படப்புத்தகமாகவே
காட்சியளிக்கிறது!

வரியே இன்றி
தலைப்பே கவிதையாய்
எழுதச் சொன்னார்கள்
உன் பெயரை
எழுதிவிட்டேன்!
(முக)வரிகளே இல்லாத
கவிதைதானே நீ...

எனது கவிதையின்
உயிரோட்டம்
பல பக்க வரிகளில் இல்லை
உனது ஒற்றைவரிப்
பின்னூட்டத்தில்தான்
உள்ளது!

"என் உடையில்
எந்த வண்ணம் பிடிக்கும்?"
என்று கேட்கிறாய்
என்ன உடையானாலும்
உன் எண்ண உடை
வண்ணமாம் வெண்மைதான்
எனக்குப் பிடிக்கும்!

உனக்குப் பிடிக்காது
என்பதை
எனக்குப் பிடிக்கும்படி
சொல்வதால்தான்
நமக்குள் பிடித்துப்போனது!
--நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, March 4, 2009

பிரிதலுக்கு முன்…

உன் கண்கள் நடத்தும்
நூலகத்தில்
எனக்களிக்கப்பட்ட
"முதன்மை வாசகன்"
முத்திரையை அழி!

என் தேகத்தின்
பாகங்கள் அனைத்திலும்
உன் தீண்டாமை என்னும்
பாவச்செயல் போக்கு!

ஒவ்வொரு செல்லிலும்
உறைந்து கிடக்கும்
உன் நினைவுகளை
உதடுகளால்
உரசி உரசியே எடு!

காலையில் தினமும்
தலைவாரும் போதெல்லாம்
உன் கூந்தல்வரை நீளும்
என் விரல்கள்
நாளையும் தேடுமே
அவைகளை இப்போதே
வெட்டியெறி!

இனி நான் வீசியெறியும்
விரக்திப் பெருமூச்சில்
உலகமே உருகுமே
அதற்கு ஒரு
மாற்று வழி அறி!

மொத்தத்தில்
உனது பிரிதலும்
எனது மறைதலும்
ஒன்றே எனக் கொள்.

– நாவிஷ் செந்தில்குமார்

Monday, March 2, 2009

நீ

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு சேலை
கட்டிவருகையில்
எனக்காக
ஒரு கவிதையையும்
கூட்டி வருபவள்
நீ

நீண்ட வரிசையில்
மிகப்பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு...
எனக்கு முன்னால்
நீ

வெந்துதணியும்
வெப்பக்காட்டில்
முக்கி முணகித்திரிந்த
காதல்பறவை நான்
வாரிக்கொண்ட
வேடந்தாங்கல்
நீ

இருண்ட தேசத்தில்
எரியும்
ஒற்றை மெழுகுவர்த்தியாய்
எனக்கென எப்போதும்
நீ

--நாவிஷ் செந்தில்குமார்

Sunday, March 1, 2009

காதலி கட்டிய சேலை

உன்னை முழுதும்
மறைத்த சேலை
என் காதலை
வெளிச்சம் போட்டுக்காட்டியது

ரசித்துக்கொண்டிருக்கையிலேயே
நீ செல்லும்
வாகனம் வந்தது...
காரோட்டி வந்தவன்
தேரோட்டியாய்ப் போனான்

உன் வருகை மழை
இல்லாத நாட்களிலும்
வாசனைத் தூரலால்
செழித்துக் கிடக்கின்றது
என் வீதி.

முலாம் பூசிக்கொள்வதற்கு
முன்பாக உன்னைப்
பூசிக்கொண்டது போல
எப்போதும்
உன்னையே காட்டும்
என் வீட்டுக்கண்ணாடி

நீ ஊருக்குச் செல்வதெல்லாம்
வெறும் பேருக்குத்தான் போல
உன் நினைவுகள்
என்னையே சுற்றிக்கொண்டிருக்கின்றன

--நாவிஷ் செந்தில்குமார்

Saturday, February 21, 2009

வினாக்கள் சில...

நான் பார்க்கக்கடவா
உன் பருவத்தின்
வளைவு நெளிவுகளில்
எங்கேனும்
ஒளிந்திருக்கக் கூடுமோ
இந்த உலகத்தின்
மிகச்சிறந்த
காதல் கவிதை?

மொட்டவிழும்
முன்காலைப் பொழுதில்
முழங்கால் மடித்துக்
கோலமிடும்
உனைக் கண்டதும்
கட்டவிழ்த்துக் கொண்ட
காதலை
எங்கொளித்துக்கொள்ளும்
என் சிறுபிள்ளை மனசு?

கடல் நீர் இழுத்து
அமுதாய்த் திரித்து
பெய்கின்ற மழையை
கையடக்கக் குடையால்
தடுத்து விடுகின்ற நீ
எதைக்கொண்டு தடுப்பாய்
என்னால் பெய்யும்
காதல் மழையை?

வேலைக்குச்செல்லும் எனக்கு
வினையூக்கியாய்
இதழ் மீது தினமும் நீ
இடும் முத்தத்திலிருந்து
எந்தப் பறவையால்
பிரித்தறியமுடியும்
காதலையும் காமத்தையும்?

--நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, February 18, 2009

காதல் நிமித்தம்

பொழுது தோறும்
போக நினைக்கும்
அவள் வீதிப்பயணம்

வாசலுக்கு
நீர் தெளிக்க வருகையில்
உயிர் துப்பிப் போகும்
அவளின் ஓரப்பார்வை

உண்ண உண்ண
பசிக்கத் தூண்டும்
அவள் நினைவு

அவளைத் தேடிக்கண்டதும்
தொலைந்து போகும்
மனசு

அவளைப் பார்க்காத
நாளிலெல்லாம்
சட்டெனப் பிறக்கின்ற
மரணம்...
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, February 9, 2009

பிப்ரவரி - 14

காலையில்
நிர்வாணம் பூண்ட
நீலவானம்
மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...

--நாவிஷ் செந்தில்குமார்

Saturday, February 7, 2009

முரண்பாடு




Saturday, January 31, 2009

தொடர் புள்ளி

Tuesday, January 27, 2009

காதல்

Saturday, January 17, 2009

அவள்

Thursday, January 15, 2009

காதல் நெருப்பு


மயில்



Wednesday, January 14, 2009

இறக்கி வை

புன்னகைப்பூ

Tuesday, January 13, 2009

உன் நினைவில்

காரணம்

நிலாச்சோறு

Monday, January 12, 2009

காதல்

Saturday, January 10, 2009

ஈரம்...

விலகிப் பிரிகிறது


காதல்


உயிருக்குள் உயிர்

இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள்
உயிர் தேடுவது...

Thursday, January 8, 2009

கைக்குழந்தை

காதல்

அன்னப்பறவை

Wednesday, January 7, 2009

இலையாய்..

Tuesday, January 6, 2009

பறக்கும் முத்தங்கள்

Monday, January 5, 2009

நேரம் நல்லாயிருக்கு

கூச்ச முத்தங்கள்

வெட்கத்திரைகள்

Friday, January 2, 2009

காவல் மட்டுமல்ல