உன் கண்கள் நடத்தும்
நூலகத்தில்
எனக்களிக்கப்பட்ட
"முதன்மை வாசகன்"
முத்திரையை அழி!
என் தேகத்தின்
பாகங்கள் அனைத்திலும்
உன் தீண்டாமை என்னும்
பாவச்செயல் போக்கு!
ஒவ்வொரு செல்லிலும்
உறைந்து கிடக்கும்
உன் நினைவுகளை
உதடுகளால்
உரசி உரசியே எடு!
காலையில் தினமும்
தலைவாரும் போதெல்லாம்
உன் கூந்தல்வரை நீளும்
என் விரல்கள்
நாளையும் தேடுமே
அவைகளை இப்போதே
வெட்டியெறி!
இனி நான் வீசியெறியும்
விரக்திப் பெருமூச்சில்
உலகமே உருகுமே
அதற்கு ஒரு
மாற்று வழி அறி!
மொத்தத்தில்
உனது பிரிதலும்
எனது மறைதலும்
ஒன்றே எனக் கொள்.
– நாவிஷ் செந்தில்குமார்
Wednesday, March 4, 2009
பிரிதலுக்கு முன்…
Monday, March 2, 2009
நீ
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு சேலை
கட்டிவருகையில்
எனக்காக
ஒரு கவிதையையும்
கூட்டி வருபவள்
நீ
நீண்ட வரிசையில்
மிகப்பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு...
எனக்கு முன்னால்
நீ
வெந்துதணியும்
வெப்பக்காட்டில்
முக்கி முணகித்திரிந்த
காதல்பறவை நான்
வாரிக்கொண்ட
வேடந்தாங்கல்
நீ
இருண்ட தேசத்தில்
எரியும்
ஒற்றை மெழுகுவர்த்தியாய்
எனக்கென எப்போதும்
நீ
--நாவிஷ் செந்தில்குமார்
Sunday, March 1, 2009
காதலி கட்டிய சேலை
உன்னை முழுதும்
மறைத்த சேலை
என் காதலை
வெளிச்சம் போட்டுக்காட்டியது
ரசித்துக்கொண்டிருக்கையிலேயே
நீ செல்லும்
வாகனம் வந்தது...
காரோட்டி வந்தவன்
தேரோட்டியாய்ப் போனான்
உன் வருகை மழை
இல்லாத நாட்களிலும்
வாசனைத் தூரலால்
செழித்துக் கிடக்கின்றது
என் வீதி.
முலாம் பூசிக்கொள்வதற்கு
முன்பாக உன்னைப்
பூசிக்கொண்டது போல
எப்போதும்
உன்னையே காட்டும்
என் வீட்டுக்கண்ணாடி
நீ ஊருக்குச் செல்வதெல்லாம்
வெறும் பேருக்குத்தான் போல
உன் நினைவுகள்
என்னையே சுற்றிக்கொண்டிருக்கின்றன
--நாவிஷ் செந்தில்குமார்
Saturday, February 21, 2009
வினாக்கள் சில...
நான் பார்க்கக்கடவா
உன் பருவத்தின்
வளைவு நெளிவுகளில்
எங்கேனும்
ஒளிந்திருக்கக் கூடுமோ
இந்த உலகத்தின்
மிகச்சிறந்த
காதல் கவிதை?
மொட்டவிழும்
முன்காலைப் பொழுதில்
முழங்கால் மடித்துக்
கோலமிடும்
உனைக் கண்டதும்
கட்டவிழ்த்துக் கொண்ட
காதலை
எங்கொளித்துக்கொள்ளும்
என் சிறுபிள்ளை மனசு?
கடல் நீர் இழுத்து
அமுதாய்த் திரித்து
பெய்கின்ற மழையை
கையடக்கக் குடையால்
தடுத்து விடுகின்ற நீ
எதைக்கொண்டு தடுப்பாய்
என்னால் பெய்யும்
காதல் மழையை?
வேலைக்குச்செல்லும் எனக்கு
வினையூக்கியாய்
இதழ் மீது தினமும் நீ
இடும் முத்தத்திலிருந்து
எந்தப் பறவையால்
பிரித்தறியமுடியும்
காதலையும் காமத்தையும்?
--நாவிஷ் செந்தில்குமார்
Wednesday, February 18, 2009
காதல் நிமித்தம்
பொழுது தோறும்
போக நினைக்கும்
அவள் வீதிப்பயணம்
வாசலுக்கு
நீர் தெளிக்க வருகையில்
உயிர் துப்பிப் போகும்
அவளின் ஓரப்பார்வை
உண்ண உண்ண
பசிக்கத் தூண்டும்
அவள் நினைவு
அவளைத் தேடிக்கண்டதும்
தொலைந்து போகும்
மனசு
அவளைப் பார்க்காத
நாளிலெல்லாம்
சட்டெனப் பிறக்கின்ற
மரணம்...
--நாவிஷ் செந்தில்குமார்
Monday, February 9, 2009
பிப்ரவரி - 14
காலையில்
நிர்வாணம் பூண்ட
நீலவானம்
மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...
--நாவிஷ் செந்தில்குமார்
